வெள்ளி, 28 செப்டம்பர், 2012

Miss you @


என் கண்களின் கருவிழி ரசித்த அவளை
என் இதயத்தின் கருவறையில் வைத்தேன்...

இன்று
என் இதயம்மட்டும் காணும் அவளை
என் விழிகள் காண தவிக்கிறது...

என் இதயத்தை
படுத்தும் அவள் நினைவுகளால்
...

என் கண்கள்
கண்ணீர் வடிக்கிறது
ஏனெனில்
இதயம் வடிக்கும் செந்நீரை துடைக்க
கண்கள் வடிக்கும் கண்ணீரால் தானே முடியும்...

காதலுக்கு கண்கள் இல்லை என்பது பொய்
உண்மையெனில்
இதயத்தின் இறுக்கத்தை இலகச்செய்ய
துணையின்றி போயிருக்குமே...

ஒவ்வொரு முறையும் - என்
உயிரை துறக்க நினைக்கும்போதெல்லாம்
தோற்றுப்போய் நிற்கிறேன் -என்
உடலைவிட்டு - அவள்
நினைவுகள் பிரிந்துவிடும் என்பதற்காக...

என்
இதயத்தை வாட்டும் அவள் நினைவுகளை
விளக்க நினைக்கும்போதெல்லாம்
விலகி நிற்கிறது என் உடலைவிட்டு
அவள் நினைவுகள் அல்ல
என் உயிர்... Kavi
Indru than manathuku konjam ... pain killer potar pole irukirathu ...En Athayudan peasi vitean . Aanal manathai thaikirathu Appayudan .... konjam sathathai uyarthi peasi vitean ..

சனி, 22 செப்டம்பர், 2012

கற்றது கையளவு தான்!


* நாம் கற்ற விஷயங்கள் வெறும் கைப்பிடி மட்டுமே. இன்னும் கற்கவேண்டிய விஷயங்கள் இந்த பரந்த பூமியைப் போல எவ்வளவோ இருக்கின்றன. அதனால் படித்து விட்டோம் என்ற இறுமாப்பு கூடவே கூடாது.
* உள்ளத்தை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி அவற்றை அடிமையாக்குவதே வீரம். அழியாத கல்வியே நிலையான செல்வம். பிறருக்கு அடிமையாகாமல் சுயமாக சம்பாதித்து உண்பதே உயர்ந்தது.
* முறையான பயிற்சியினால் சித்திரம் வரையப் பழகலாம். நாவின் பயிற்சியால் செந்தமிழில் பேச முடியும். மனப்பயிற்சியால் கல்வியில் தேர்ச்சிபெறலாம். ஆனால், நண்பர்களிடம் உண்மையான நட்புடன் பழகுதல், உயிர் இரக்கம் காட்டுதல், இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்தல் ஆகிய நற்குணங்கள் ஒருவனுக்கு
பிறவியிலேயே அமையவேண்டும்.
* அறம் என்பது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலாகும். பொருள் என்பது நேர்மையான முறையில் நியாயமாக சம்பாதிப்பதாகும். இன்பம் என்பது உண்மை அன்பில் கருத்தொருமித்து தம்பதியராய் வாழ்வதாகும். வீடு என்பது இம்மூன்றையும் மறந்து கடவுளைச் சிந்திப்பதாகும்.
-அவ்வையார்

புதன், 19 செப்டம்பர், 2012

Refuse Atom Energy

அணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது!!
(முழுமையாக படிக்கவும்!!)

அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்...
. நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.

திங்கள், 17 செப்டம்பர், 2012


பெண்மை
உடலும் உள்ளமும் ஒருங்கே தந்து
தாயாகும்
பெண்மை
ரத்தமும் சதையும் கலந்து
...
தமக்கையாகும்
பெண்மை
குறும்பும் அழகும் கலந்து
தங்கையாகும்
பெண்மை
மேன்மையும் மென்மையும் சேர்ந்து
தேவதையாகும்
தாய் தந்தையாவாள்
தமக்கை தாயாவாள்
தங்கை மகளாவாள்
பெண்ணால் இத்துணை சாத்தியம்
ஆனால்
நட்பின் மேன்மை பெண்ணுக்கு மறுக்கப்படுவது
ஏன்
ஆயிரம் உறவுகளின் மேன்மை காட்டும்
பெண்ணால் தோழியாக அரிதாரம்
பூச முடியாதா
எம் நட்பின் பெருமை
நீவீர் அறியீர்
தடையேதும் இன்றி ஊர் சுத்துவதல்ல நட்பு
தடை பல கண்டாலும்
அன்னையாய் மடி தருவது நட்பு
எம் நட்பு ஊர் சுற்றும் நட்பல்ல
மடி தரும் நட்பு
ஆணினமே புரிந்து கொள்

சனி, 15 செப்டம்பர், 2012

Azagea Azagu

அழகே அழகு

சில திரையிசைப் பாடல்கள் கேட்ட முதல்நாளில் இருந்து இன்று வரை அதன் ஈர்ப்பை அப்படியே வைத்திருக்கின்றன, அதில் ஒன்று ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடியுள்ள அழகே அழகு தேவதை பாடல்
கவியரசர்  கண்ணதாசன் எழுதிய இப்பாடல் பாதாதி கேசம் பெண்ணை வர்ணிக்கும் மரபில் உருவானது, பாடலை ரசித்து அழகாக எழுதியிருக்கிறார் கவியரசர், எளிமையும், வியப்பும் ஒருங்கே கொண்ட பாடலது, கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் மனதில் ஒரு பெண்உருவம் தோன்றி பாடல் கேட்பவரை தன்வசமாக்குகிறது,
ராஜபார்வை தமிழ்சினிமாவில் முக்கியமான ஒரு படம், இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதிதுபுதிதாக ஆச்சரியங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இன்று வெளியாகியிருக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக எப்படி உருவாக்கினார் கமல்ஹாசன் என்று வியப்பாகவே உள்ளது
வேறுமாநிலங்களில் இருந்து நடிகைகளை மட்டுமே தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்து கொண்டிருந்த சூழலில் ராஜபார்வையில் இடம்பெற்ற கலைஞர்களின் பட்டியலைப் பாருங்கள், படத்தின் இயக்குனர் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த சிங்கிதம் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் வங்காளத்தைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் பரூண் முகர்ஜி, முக்கியக் கதாபாத்திரமொன்றில் நடித்திருப்பவர் தெலுங்கு தமிழ் திரைப்படங்களின் முக்கியத் தயாரிப்பாளரும், நடிகருமான எல்.வி.பிரசாத், இன்னொரு முக்கியக் கதாபாத்திரம்  கேரளாவைச் சேர்ந்த  K.P.A.C. லலிதா, இவர் இயக்குனர் பரதனின் மனைவி.
மாதவியின் அப்பாவாக நடித்திருப்பவர் ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஏவி.தனுஷ்கோடி, இவர்  அமெரிக்கத் தூதரகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர், சிறந்த ஒவியர், ஜெர்மனியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்புகள் செய்திருப்பவர், படத்தின் உயிரோட்டமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா, இவர்களுடன் கண்ணதாசன், வைரமுத்து இருவரின் அற்புதமான பாடல்கள், இப்படி படத்தின் உருவாக்கத்தில் இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகள் பலரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள், ஆனால் படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை, அதற்கான முக்கிய காரணம் கமல்ஹாசனின் நூறாவது படம் என்பது குறித்து அவரது ரசிகர்கள் மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள், அதை நிறைவேற்றி வணிகவெற்றி பெறுவதைவிடவும் தனக்கு விருப்பமான ஒரு கதையை, விருப்பமான தொழில்நுட்பக்குழுவினரைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கமல்ஹாசன்  இப்படத்தைத்  தயாரித்திருந்தார்,
இசையை மையமாகக் கொண்ட படமாக அமைந்ததோடு சம்பிரதாயமான காதல்காட்சிகள், சண்டைகள், திடீர் திருப்பங்கள் எதுவுமில்லாமல் மாறுபட்ட கதைசொல்லும்முறையை கொண்டிருந்ததை அன்றைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கு காரணம் அன்று தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருந்த பொது ரசனை,
1981களில்  மாறுபட்ட காதல்கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தன, அதில் பன்னீர்புஷ்பங்க்ள், பாலைவனச்சோலை, இன்று போய் நாளை வா, அலைகள் ஒய்வதில்லை ஆகிய நான்கு படங்களும் நான்குவிதமான காதல்கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்லி வணிகரீதியாக வெற்றி பெற்றன, இந்த ஆண்டு வெளியான மகேந்திரன் இயக்கிய நண்டு புதிய கதைக்களனோடு  வெளியானது, ஆனால் படம் வணிக வெற்றியை பெறவில்லை, அது போன்ற ஒரு சூழலே ராஜபார்வைக்கும் நேர்ந்த்து,
அழகே அழகு தேவதை பாடல் படமாக்கபட்டுள்ள விதம் சிறப்பானது, கேமிரா நகர்வதற்கு போதுமான அளவு கூட இல்லாத ஒரே வீடு, அதற்குள் முழுப்பாடலும் எடுக்கபட்டிருக்கிறது, ஆடம்பரமில்லை, பகட்டான ஆடை அணிகள் இல்லை, மாதவியின் கிளர்ச்சியூட்டும் அழகு தான் பாடலின் மையப்புள்ளி. பாடல் இடம் பெறும் சூழல் கதையின் போக்கில் ஒரு முக்கியத் தருணம். பாடலின் துவக்கமும் முடிவும் அதைக் கதையோடு சேர்ந்த பாடலாகப் பொருந்த வைக்கிறது,
இப்படத்தில் திரைப்படப் பின்னணி இசை சேர்க்கும் குழுவில் உள்ள பார்வையற்ற வயலின் இசைக்கலைஞராக கமல்ஹாசன் நடித்திருக்கிறார்,  கதை எழுதுவதற்காக அவரைச் சந்திக்கும் மாதவி அவரோடு நெருங்கிப் பழகத் துவங்குகிறார், இவரும் ஒருநாள் சமையல் செய்கிறார்கள், சமையல் புத்தகத்தை பார்த்துச் சமைக்க முற்படும் போது எதிர்பாராத விதமாக சமையல்பொருள்களை மாதவி மீது கொட்டிவிடுகிறார் கமல், அவள் குளித்துவிட்டு ஈரத்தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டவராக அமர்ந்திருக்கையில் அவளது அழகை வியந்து பாடுவதாகவே இப்பாடல் இடம் பெற்றுள்ளது
அழகே அழகு, தேவதை என்ற மூன்று வார்த்தைகளில் அவளது அழகின் மீதான லயப்பு முழுமையாக வெளிப்பட்டுவிடுகிறது, அதிலும் அழகு என்று உச்சரிக்கும் போது ஏற்படும் சிலிரிப்பு பின்வரும் தேவதை என்ற சொல்லின் வழியே நிறைவு அடைகிறது,
ராஜபார்வை முழுவதும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் தான், குறிப்பாக பார்வையற்றோர் பள்ளியில் நடைபெறும் வயலின் இசை நிகழ்வில் அவர் அமைத்துள்ள இசைக்கோர்வை உலகத்தரமானது, இப்பாடலின் துவக்கத்தில் ஜேசுதாஸின் ஹம்மிங் மயக்ககூடியது,
ஒவியத்தின் மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், அவரது படங்களில் ஒவியர்கள் கதாபாத்திரமாக வருவதுண்டு, அவரே அன்பே சிவத்தில் ஒவியராக நடித்திருக்கிறார், காதலா காதலாவிலும் ஒவியம் வரைபவராக பிரபுதேவா சித்தரிக்கபடுவார், விருமாண்டியிலும் ஒரு ஒவியர் முக்கிய சம்பவங்களின் சாட்சியாக இருப்பார், இப்பாடலில் மாதவி  சித்திரம் வரைந்து கொண்டிருக்க அவரது ஒவ்வொரு அங்கமாக தொட்டுணர்ந்து கமல்ஹாசன் பாடுகிறார்,
தனது அழகைப்பற்றி பாடுவதை உள்ளுற ரசித்தபடியே அவரைசீண்டிக் கொண்டிருக்கிறார் மாதவி, குறிப்பாக பட்டன் அணியாத மேல்சட்டையுடன் உள்ள கமலின் உணர்ச்சிபாவங்களும், அவரது தலையில் செல்லமாகத் தட்டி விளையாட்டுகாட்டும் மாதவியின் நளினமும் காதல்வசப்பட்ட அவர்களின் நெருக்கத்தை தெளிவாக காட்சிபடுத்தியிருக்கின்றன
படியில் அமர்ந்திருந்த மாதவியைக் காணவில்லை என்று கமல் தேடும்போது அவரது விரலைப்பற்றி பல்லிடுக்கில் வைத்துக் கடிக்கும் அவரது குறும்புதனமும் விடுபடாத விரலோடு ததும்பும் மனமயக்கத்தில் அந்த இதழ்களை தொட்டு அறிந்து அவர் பாடுகிறார்
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது
அறைக்குள்ளாகவே பாடல் படமாக்கபட்டுள்ளது, ஆனால் மாறுபட்ட கோணங்கள், உணர்ச்சிநிலைகள், ஊடல் என அந்தரங்க நெருக்கத்தை தருகிறது இப்பாடல், அதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் நேர்த்தியான இசையும் யேசுதாஸின் மென்மையான குரலும் பருண் முகர்ஜியின் கவித்துவமான ஒளிப்பதிவும், நடனமில்லாமல் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கமல் மற்றும் மாதவியின் நடிப்புமே, இவையே பாடலின் வெற்றிக்கான முதன்மைக் காரணங்கள்
ராஜபார்வை படத்தில் குறிப்பிட்டுள்ள சொல்ல வேண்டிய மூவர், தாத்தாவாக நடித்துள்ள எல்வி பிரசாத், இவர் பிரசாத் ஸ்டுடியோவின் அதிபர், தெலுங்கில் நடிகராக அறிமுமாகி முக்கியத் தமிழ் தெலுங்கு தயாரிப்பாளராக பல புகழ்பெற்ற படங்களை உருவாக்கியவர், படத்தில் அவரது கதாபாத்திரம் வித்தியாசமானது, தனது பேத்தியின் காதலுக்காக அவர் நடந்து கொள்ளும விதம், இரவில் சாலையில் நிற்கும்  கமலிடம் பெர்த்டே வாழ்த்து சொல்லும் அன்பு, மாதவியின் காதலைப்பற்றி முன்பே தெரியுமா எனக் கோபத்துடன் கேட்கும் மகனிடம் தடுமாற்றதுடன் சமாளிக்கும் பாங்கு, இறுதிக் காட்சியில் தேவாலயத்தில் இருந்து காதலர்களை சேர்த்து வைக்கும் போது வெளிப்படும் அவரது உறுதியான மனப்போக்கு யாவும்  அவரை மறக்கமுடியாத ஒரு நடிகராக மாற்றிவிடுகின்றன,
இது போன்ற பாத்திரப்படைப்புகள் இன்று தமிழ் சினிமாவில் நிறைய வந்துவிட்டன, ஆனால் ராஜபார்வை தான் அதன் முதல்முயற்சி, அதற்கு முந்திய ஆண்டுகளில் வயதானவர்கள் என்றாலே ஒரே மெலோடிராமாவாக இருக்கும், அதைத் தூக்கிப்போட்டுவிட்டு புதியதொரு கதாபாத்திரமாக எல்விபிரசாத்தின் தாத்தா ரோல் உருவாக்கபட்டிருக்கிறது
இது போலவே படத்தில் தனித்து பாராட்ட இன்னொரு கலைஞர் ஏவி தனுஷ்கோடி, ஆங்கிலப்பேராசிரியராக சில ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இருபது ஆண்டுகள் அமெரிக்க தூதரகத்தில் பொருளதாரப்பிரிவில் ஆலோசகராக பணியாற்றியவர், ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர், தேர்ந்த ஒவியர், மொழிபெயர்ப்பாளர், இவர் மாதவியின் தந்தையாக நடித்திருக்கிறார்,
படபடப்பும், முன்கோபமும் கொண்ட கதாபாத்திரமது, அவரது கார் வி.கே.ராமசாமி காரோடு மோதும் போது ஏற்படும் கோபம், வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட கமல்ஹாசனிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் விதம், மகளிடம் கோபத்தில் கத்தும் போது ஏற்படும் உணர்ச்சிவேகம், பெண்கேட்டு வந்த கமல்ஹாசன் முன்பாக அப்பாவியாக கேட்கும் இயல்பு, இரவில் குடித்துவிட்டு தன்வீட்டின் முன்பு கலாட்டா  செய்யும் கமல் கோஷ்டியைக் கண்டு ஏற்படும் ஆத்திரம் என்று தனுஷ்கோடி சிறப்பாக நடித்திருக்கிறார், இவ்வளவு தேர்ந்த நடிகர் ஏன் தமிழ்சினிமாவால் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போனார் என்பது ஆதங்கமாகவே உள்ளது,
இது போலவே கமலின் சிற்றன்னையாக வரும் K.P.A.C. லலிதா, அரியதொரு கதாபாத்திரம், வழக்கமான சித்தி போல கொடுமைக்காரியாக அவர் சித்தரிக்கபட்ட போதும் வீடு தேடிவந்து அவர் கமலிடம் பேசும் முறையும், அவருக்காக விகேராமசாமியிடம் பெண் கேட்பதும், போலீஸில் இருந்து மகனை மீட்டுவந்து காட்டும் அக்கறையும், மாதவி வீட்டில் போய் பேசும் கம்பீரமும், தான் விரும்பிய பெண்ணை கமல் ஒத்துக் கொள்ள மறுக்கும் போது காட்டும் ஆதங்கமும் என K.P.A.C. லலிதா தேர்ந்த நடிகை என்பதை நிருபணம் செய்திருக்கிறார், அவருக்கும் கமலிற்குமான உரையாடல்கள் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன,
எண்பதுகளில் வெளியான மலையாளத்திரைப்படங்களின் அழகியலை ஒத்தே ராஜபார்வை உருவாக்க்பட்டிருக்கிறது,  மொத்தபடத்திலும் பத்தே கதாபாத்திரங்கள், அதிலும் நான்கு பேர் தான் முக்கியமானவர்கள்,  அவர்களை சுற்றியே படம் இயங்குகிறது. சம்பிரதாயமான காட்சிகள் என ஒன்று கூட கிடையாது, கமல் குடியிருக்கும் வீடு, அவரது ஒலிப்பதிவு கூடம், பார்வையற்றோர் பள்ளி யாவும் மிக இயல்பாக, யதார்த்தமான பின்புலமாக உருவாக்கபட்டிருக்கிறது,
1980 ஆண்டு சாய் பரஞ்சிபே ஸ்பார்ஷ் என்றொரு படத்தை இயக்கினார், இதில் நஸ்ருதீன்ஷா பார்வையற்றவராக நடித்திருக்கிறார், இப்படத்திற்கு ராஜபார்வைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன, இரண்டிலும்  முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றவர்களிடம் இருந்து உதவியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், blind need help not pity or charity என்பதே இருவரது எண்ணமும்,
இரண்டிலும் பார்வையற்றோர் பள்ளி முக்கியக் களமாக உள்ளது,  ஸ்பார்ஷ் படத்தில்  ஷபனா ஆஸ்மி கதாநாயகியாக நடித்திருக்கிறார், அவரது தோற்றம் மற்றும் கேசத்தை வாறிவிடும் இயல்பு ஆகியவை போலவே மாதவியின் தோற்றமும் உள்ளது,
ஸ்பார்ஷ் படத்தில் ஒரு நாள் ஷபனா ஆஸ்மியின் பாடலை தற்செயலாக கேட்ட நஸ்ரூதீன் ஷா அவரைத் தனது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாட்டு கற்றுதரும்படியான சேவைக்கு அழைக்கிறார், விதவையான ஷபனா ஆஸ்மி தயங்கி ஏற்றுக் கொள்கிறார், இருவரும் பேசிப்பழகி ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள், ஷபனாவைக் காதலிக்கத் துவங்குகிறார்  நஸ்ரூதீன் ஷா, அவர்களது திருமணம் நிச்சயக்கபடுகிறது, ஆனால் கருத்துவேறுபாடால் திருமணம் நின்று போகிறது, ஷபனா முன்பு போலவே பார்வையற்றோர் பள்ளியில் பாடல் சொல்லிக் கொடுத்தபடியே தனது நாட்களை கழிக்கிறார், முடிவில் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்,
இப்படத்தின் கதையும் ராஜபார்வையின் கதையும் வேறுபட்டவை, ஒருவேளை ஸ்பார்ஷ் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் காரணமாக கமல் ராஜபார்வையை உருவாக்கியிருக்க்கூடும், நஸ்ரூதீன் ஷாவிற்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, ஆனால் தமிழ் சினிமாவில் அதன்முன்புவரை இப்படியொரு கதாபாத்திரம் உருவாக்கபடவில்லை,
ஒரு நடிகராக கமலின் இன்னொரு உயரிய பரிமாணம் இப்படத்தில் வெளிப்பட்டுள்ளது, வழக்கமான டுயட்டுகள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை, படம் முழுவதும் பார்வையற்றவரின் மொழியாக இசையே உள்ளது, அம்மாவிடம் கமல் வயலினில் பேசும் காட்சியில் மாஸ்ட்ரோ இளையராஜாவின் இசை விளையாடுகிறது, பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மாவிலை பாதமோ என்ற உவமை கண்ணதாசனின் கற்பனையை கொண்டாட வைக்கிறது, அவ்வகையில் இப்பாடல் அழகே அழகு என்று தான் சொல்ல வேண்டும்
••
ஹாலிவுட் திரையுலகில் வூடிஆலன் ஒரு கலக்க்கார இயக்குனர், எதையெல்லாம் அமெரிக்க மக்கள் வெளிப்படையாகப் பேசத்தயங்குகிறார்களோ அவற்றைத் தனது படங்களின் வழியே நேரடியாகப் பேசக்கூடியவர், அமெரிக்க கலாச்சார வாழ்வின் பொய்மைகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தகூடியவர், செக்ஸ், பாலிடிக்ஸ், ஆர்ட்ஸ் என்று ஒவ்வொரு துறையிலும் அமெரிக்க மக்களின் ரசனையும் ஈடுபாடு எப்படி உருவாக்கபடுகிறது என்பதை இவரைப் போல பகடி செய்தவர் எவருமில்லை, ஒருவகையில் அமெரிக்க மத்திய தர வாழ்க்கையின் மனசாட்சியை போல வாழ்பவர், சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,  எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
ரிச்சர்ட் சீகெல் என்ற பத்திரிக்கையாளர் இவரை ஒரு நீண்ட நேர்காணல் நடத்தியிருக்கிறார், அது தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றது, அந்த நிகழ்வின் தொகுப்பு போல உருவாக்கபட்ட புத்தகமே WOODY ALLEN: A LIFE IN FILM.  இதில் வூடி ஆலன் தனது திரைப்படங்களின் உருவாக்கம் மற்றும் அதன் பின்புலமாக உள்ள தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சுவாரஸ்யமான புத்தகமிது, வூடி ஆலனின் படங்கள் இரண்டு தலைமுறையாக இன்றும் அதே வசீகரத்துடன் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகின்றன,
வூடிஆலனின் நகைச்சுவை உணர்வு பிரபலமானது, அவரது வசனங்கள் ஹாலிவுட்டில் அடிக்கடி மேற்கோள்களாக சொல்லப்படுபவை,
அவரது புகழ்பெற்ற ஒரு வசனம்
The difference between sex and death is, with death you can do it alone and nobody’s going to make fun of you.
சமீபத்தில் வூடி ஆலன் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “Midnight in paris” , இப்படம் இலக்கியவாதிகளின் காலத்திற்குள் பிரவேசிக்கும் கனவுப்பயணம் பற்றியது, பாரீஸ் நகரைப்பற்றி ஹெமிங்வே எழுதியுள்ள குறிப்புகளை முன்வைத்து உருவாக்கபட்ட ஒரு மாயச்சித்திரம் எனலாம்
கில் பென்டெர் ஒரு எழுத்தாளர். அவன் தனது ஆதர்ச நாவலை முடிக்க முடியாமல் சிரமப்படுகிறான், அப்போது தனக்கு நிச்சயமான பெண்ணுட்ன்  பாரீஸ் செல்ல நேர்கிறது.
கலைகளின்  கூடாரமான பாரீஸ் அவனை மிகவும் ஈர்த்துவிடுகிறது,  அவனது காதலியின் குடும்பமோ ஆடம்பரமும் பகட்டும் கொண்டது, அவர்களின் இரவு விருந்தில் கலந்து கொள்ள விருப்பமற்று வெளியேறிப் போகிறான் கில்,
இரவு  பன்னிரண்டு மணி அடிக்கும்போது ஒரு கார் அருகில் வந்து நிற்கிறது. அது பழங்காலத்து கார், அதிலிருந்து பழங்கால பாணியில் உடை அணிந்த சிலர் இறங்கி கில்லை தங்களுடன் வரும்படி 1920ம் வருசத்திற்கு அழைத்துப் போகிறார்கள், காலம் புரண்டு பின்னால் போகிறது
1920களில் பாரீஸ் ஒவியம் இலக்கியம் கவிதை இசை என்று ஒரே கேளிக்கையாக இருக்கிறது, அங்கே கில் தனது ஆதர்ச எழுத்தாளர் ஹெமிங்வேயை சந்திக்கிறான்,  அவர் நீ என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று அன்போடு விசாரிக்கிறார், கில் தனது கதையைச் சொல்கிறான்,  அவனுக்கு எழுத்தாளர் கிர்ட்ரூட் ஸ்டெயினை அறிமுகம் செய்து வைப்பதாக ஹெமிங்வே சொல்கிறார், கில்லால் நம்பவே முடியவில்லை, அவன் ஹோட்டலுக்கு போய் தனது நாவலின் பிரதியை எடுத்துவரப்போகிறான், வெளியே வந்து பார்த்தால் காலம் புரண்டு மீண்டும் 2010ம் ஆண்டாக உள்ளது,
மறுநாளும்  இது போல இன்னொரு காலப்பயணம் ஏற்படுகிறது, இம்முறை அவன் பாப்லோ பிகாசைவைச் சந்திக்கிறான், பிகாசோவின் காதலி ஆட்ரியானாவுக்கு கில்லை பிடித்துப் போய்விடவே அவர்கள் காதலிக்க துவங்குகிறார்கள், இந்த காலமயக்கத்தால் இன்றுள்ள காதலியோடு அவனால் இயல்பாக பழகமுடியவில்லை, மனம் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கவே ஆசை கொள்கிறது,
இதற்கிடையில் அவன் ஒரு பழைய புத்தகக் கடையில் ஆட்ரியானாவின் டைரியைக் கண்டடைகிறான், அதில் அவள் ஒரு அமெரிக்க எழுத்தாளனை காதலித்த விபரங்கள் உள்ளது, அவனால் நம்பவே முடியவில்லை, அது எப்படி சாத்தியமானது என்ற புதிரோடு அவளை மறுபடி சந்திக்க தனது கடந்த காலப்பயணத்திற்காக காத்திருக்கிறான்,
மறுபடி ஒரு பயணம் சாத்தியமாகிறது. கில் ஆட்ரியானை சந்திக்கிறான், அவளோ அவனை ஒரு குதிரை வண்டியில் 1890களுக்கு அழைத்துப் போய்விடுகிறாள், அது எட்கர் ஆலன் போ வசித்த  காலம், அங்கேயே நாம் தங்கிவிடலாம் என்கிறாள்,
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தைவிடவும் இலக்கியத்தின் வழியே நம் நினைவில் பதிந்து போயிருக்கும் காலமே ஆதர்சமான ஒன்று, அது நம்மை பல்வேறு காலங்களில் வாழ வைக்கிறது, நாம் நாவலின் வழியே இன்னொரு காலத்திற்குள் சென்று வசிக்கிறோம், இலக்கிய வாசிப்பு என்பது நம்மை பல உலகங்களில் வாழ வைப்பது என்பதை கில் உணர்ந்து கொள்கிறான்,
இலக்கியவாதிகளை முக்கியக் கதாபாத்திரமாக கொண்ட இக் காதல் கதையில் காலத்தின் முன்பின்னாகச் சென்றுவரும் கதாபாத்திரங்களின் வழியே கலையின் உயர்தன்மையை அடையாளப்படுத்துகிறார் வூடி ஆலன், படத்தின் முடிவு மிகுந்த கவித்துவமானது, இது போன்ற கனவுத்தன்மை கொண்ட திரைப்படத்தை உருவாக்கி வெற்றி  காண்பது வூடி ஆலனால் மட்டுமே சாத்தியமான ஒன்று,
••